ஹெலிகாப்டரில் சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி வியாபாரியிடம் ரூ.8½ லட்சம் மோசடி


ஹெலிகாப்டரில் சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி  வியாபாரியிடம் ரூ.8½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 6 July 2023 6:45 PM GMT (Updated: 6 July 2023 6:46 PM GMT)

உப்பள்ளியில் ஹெலிகாப்டரில் சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி வியாபாரியிடம் ரூ.8½ லட்சத்தை மர்மநபர் மோசடி செய்துள்ளார்.

உப்பள்ளி-

உப்பள்ளியில் ஹெலிகாப்டரில் சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி வியாபாரியிடம் ரூ.8½ லட்சத்தை மர்மநபர் மோசடி செய்துள்ளார்.

வியாபாரி

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா விவேகானந்தா காலனியை சேர்ந்தவர் உமேஷ். இவர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி லீலாவதி. இந்தநிலையில், உமேஷ் இன்ஸ்டாகிராமில் சுற்றுலா தொடர்பான விளம்பரங்களை பார்த்தார். அதில், ெஹலிகாப்டரில் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்வதாக இருந்தது. உமேஷ் அதில் கேட்ட விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்தார்.

இதையடுத்து அவரது செல்போன் எண்ணிற்கு மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் ெஹலிகாப்டரில் குறைந்த விலையில் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்வதாக கூறினார். அதாவது வடமாநிலங்களான எமனோத்ரி, கங்கோத்ரி, ஹேதார் மற்றும் பதரி ஆகிய இடங்களில் உள்ள புனித தலங்களுக்கு அழைத்து செல்வதாக கூறினார்.

இதையடுத்து உமேஷ் மற்றும் மனைவிக்கும் ெஹலிகாப்டரில் சுற்றுலா செல்ல டிக்கெட் கேட்டு மர்மநபரிடம் விண்ணப்பித்து இருந்தார். இதையடுத்து மர்மநபர் ரூ.8½ லட்சம் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.

ரூ.8½ லட்சம் மோசடி

இதனை நம்பிய உமேஷ் மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.8½ லட்சத்தை பல்வேறு தவணைகளாக அனுப்பினார். ஆனால் மர்மநபர் கூறியபடி உமேசுக்கு ஹெலிகாப்டரில் சுற்றுலா செல்ல டிக்கெட் அனுப்பவில்லை.

இதையடுத்து மர்மநபருக்கு உமேஷ் தொடர்பு கொண்டார். ஆனால் அவரது எண் சுவிட்ச்- ஆப் என வந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உமேஷ் இதுகுறித்து தார்வார் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story