பணமதிப்பிழப்பு விவகாரம்: மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை


பணமதிப்பிழப்பு விவகாரம்: மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
x

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நாளை விசாரிக்கிறது.

புதுடெல்லி,

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு நாளை விசாரிக்கிறது.

6 ஆண்டுகளுக்கு முன்பு, 2016இல் நவம்பர் 8 அன்றிரவு 500 மற்றும் 1000 நோட்டுகளின் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்தது. அதன்படி நாடு முழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த முடிவின் மூலம் நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று மத்திய அரசு வாதிட்டது. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டு 6 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய அரசின் இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது.

பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்த பிறகு இந்த முடிவுக்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நவம்பர் 15, 2016 அன்று, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், "பணமதிப்பு நீக்கத் திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கம் பாராட்டுக்குரியது. பொருளாதாரக் கொள்கையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை, ஆனால் மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இந்த விவகாரத்தில் அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்'' என்றார்.

பின்னர், 16 டிசம்பர் 2016 அன்று, ​​அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தடை உட்பட, பணமதிப்பிழப்பு விவகாரத்தில் இடைக்கால உத்தரவு எதையும் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ​​பணமதிப்பிழப்பு விவகாரம் தொடர்பாக பல்வேறு ஐகோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

அரசாங்கத்தின் பணமதிப்பிழப்பு திட்டத்தில் பல சட்டப் பிழைகள் இருப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதையடுத்து, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கை கோர்ட்டு அனுப்பியது.

இதற்காக 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ளது. நீதிபதி எஸ்.அப்துல் நசீர் தலைமையில் விசாரணை நடத்தப்படும்.


Next Story