போக்குவரத்து விளக்கு கம்பங்களில் 'கியூ.ஆர் கோடு'- போக்குவரத்து நெரிசலின் போது மருத்துவ உதவி பெற புதிய முயற்சி..!!


போக்குவரத்து விளக்கு கம்பங்களில் கியூ.ஆர் கோடு- போக்குவரத்து நெரிசலின் போது மருத்துவ உதவி பெற புதிய முயற்சி..!!
x

போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருக்கும்போது மருத்துவ உதவி பெற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரு,

இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் எப்போதும் பெங்களூர் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக பெங்களூரில் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடியே தான் செல்கின்றன.

இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிக்கி தவிக்கின்றனர். அந்த சமயங்களில் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்படுவோர் முதலுதவி சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர், இந்த நிலையில் இதற்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் புதிய தீர்வை கொண்டு வந்துள்ளனர்.

அதாவது பெங்களூரு முழுவதும் உள்ள போக்குவரத்து விளக்கு கம்பங்களில் போக்குவரத்து போலீசாரும், மணிப்பால் மருத்துவமனையும் இணைந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருக்கும்போது மருத்துவ உதவி தேவைப்படுவோருக்காக எளிதில் தொடர்பு கொள்ள கியூ.ஆர் கோடை ஒட்டியுள்ளனர்.

மருத்துவ உதவி தேவைப்படுவோர் இந்த கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் தாங்கள் இருக்கும் இடத்திலே மருத்துவ உதவிகளை எளிதில் பெற முடியும்.

இது குறித்து மணிப்பால் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், "இது போன்ற அவசர சூழ்நிலையில் மக்கள் பீதியடைந்து, தொலைபேசி எண்களை நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களில் சிலரிடம் அவசரகால எண்கள் கூட இல்லை. எனவே மக்கள் இதை ஸ்கேன் செய்து விரைவில் மருத்துவ சேவையைப் பெறலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு நகரவாசிகளும் அவசர காலங்களில் இந்த வசதி மக்களுக்கு உதவும் என்று இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். அதேநேரம், நகரின் போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஆம்புலன்ஸ்கள் மருத்துவ உதவி தேவைப்படும் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றடைவதில் உள்ள சிரமத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Next Story