உடன் படிக்கும் சிறுமியின் சகோதரியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவர்கள் பா.ஜ.க. நிர்வாகி மகன் உள்பட 3 பேர் கைது


உடன் படிக்கும் சிறுமியின் சகோதரியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவர்கள் பா.ஜ.க. நிர்வாகி மகன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 July 2023 3:19 AM GMT (Updated: 17 July 2023 3:20 AM GMT)

மத்தியபிரதேசத்தில் உடன் படிக்கும் சிறுமியின் சகோதரியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

போபால்,

மத்திய பிரதேசத்தின் டாடியாவை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பள்ளி முடிந்து தன் 19 வயது சகோதரியுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்களை சிறுமியுடன் படிக்கும் சக மாணவர்கள் 4 பேர் பின்தொடர்ந்து சென்றனர்.

பின்னர் ஒரு வீட்டிற்குள் அவர்கள் இருவரையும் இழுத்துச்சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதனை சிறுமியின் சகோதரி தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் 19 வயது பெண்ணை கட்டி வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர்.

சம்பவத்திற்கு பிறகு வீடு திரும்பிய 19 வயது இளம்பெண் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்தநிலையில் இதுகுறித்து பள்ளி மாணவி போலீசிடம் புகார் அளித்தார்.

இதில் ஒருவன் உள்ளூர் பா.ஜ.க. பிரமுகரின் மகன் என்பது தெரிந்தது. இதனால் அவனை கைது செய்ய போலீசார் தயங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிந்த போலீசார் 4 சிறுவர்களை வலைவீசி தேடினர்.

இந்தநிலையில் பா.ஜ.க. பிரமுகரின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஒருவனுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் அறிவித்து தேடி வருகிறார்கள்.

இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் பா.ஜ.க. பிரமுகரின் மகன் உள்பட 4 பேர் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story