மணிப்பூரில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்..! - மாணவர்கள் வருகை குறைவு


மணிப்பூரில் மீண்டும் திறக்கப்பட்ட  பள்ளிகள்..! - மாணவர்கள் வருகை குறைவு
x

Image Courtacy: ANI

தினத்தந்தி 5 July 2023 7:30 AM GMT (Updated: 5 July 2023 11:27 AM GMT)

மணிப்பூரில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பட்டன. முதல்நாளில் மாணவர்கள் வருகை குறைவாக காணப்பட்டது.

இம்பால்,

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க மே 3-ம் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. கலவரம் எதிரொலியாக இணையதள சேவைக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

இந்த சூழலில், மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலத்தின் பிரதான தொழிலாக இருக்கும் விவசாயம் மீண்டும் சீரான முறையில் நடைபெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும் விரைவில் மாநிலம் முழுவதும் இயல்புநிலை திரும்ப வேண்டும் என்றும் வன்முறை குழுக்கள் உருவாக்கியுள்ள பதுங்கு குழிகள் அழிக்கப்பட வேண்டும் என்றும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று முதல் இயக்கப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மணிப்பூரில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பட்டன. முதல்நாளில் மாணவர்கள் வருகை குறைவாக காணப்பட்டது. இதன்படி இம்பாலில் உள்ள லிட்டில் ப்ளவர் பள்ளி மற்றும் குவாகீதெலில் உள்ள தி ரெகுலர் ஆங்கில உயர்நிலைப் பள்ளி உட்பட மாநிலத்தில் உள்ள சில பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. வேறு சில பள்ளிகள் தற்போது நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், அவை மீண்டும் திறப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


Next Story