சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா; டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு


சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா; டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 14 Aug 2022 2:16 AM GMT (Updated: 14 Aug 2022 2:16 AM GMT)

சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடக்கிற கோலாகல விழாவில் பிரதமர் மோடி மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுகிறார். இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு 7 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றிலும் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றும் வரையில், அதன் 5 கி.மீ. பரப்பளவில் பட்டம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் பிற அமைப்புகளின் டிரோன் தடுப்பு அமைப்புகள் நிறுவப்படுகின்றன.

டெல்லி பாதுகாப்பு பற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "செங்கோட்டையை சுற்றிலும் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தி இருக்கிறோம். அவற்றில் பதிவாகிற காட்சிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. மதிய உணவு டப்பாக்கள், தண்ணீர் பாட்டில்கள், ரிமோட்-கண்ட்ரோல் கார் சாவிகள், சிகரெட் லைட்டர்கள், கைப்பெட்டிகள், கைப்பைகள், கேமராக்கள், பைனாகுலர்கள், குடைகள் உள்ளிட்டவை டெல்லி செங்கோட்டை வளாகத்தில் அனுமதிக்கப்படாது" என தெரிவித்தார்.

டெல்லி சட்டம், ஒழுங்கு சிறப்பு போலீஸ் கமிஷனர் தீபேந்திர பதக் கூறும்போது, "டெல்லியில் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை போடப்பட்டுள்ளது. 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையில், பட்டங்களையோ, பலூன்களையோ, சைனீஸ் லாந்தர்களையோ பறக்க விட்டால் தண்டிக்கப்படுவார்கள். வான்வழி தளங்கள், ஆளில்லா மற்றும் ஆள் உள்ள பறக்கும் பொருட்களில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் டெல்லி செங்கோட்டையில் ரேடார்கள் பயன்படுத்தப்படும்" என தெரிவித்தார்.


Next Story