போக்குவரத்து துறையின் உத்தரவுகளை மீறும் ஓலா, ஊபர் வாகனங்கள் பறிமுதல்; மந்திரி ஸ்ரீராமுலு பேட்டி


போக்குவரத்து துறையின் உத்தரவுகளை மீறும் ஓலா, ஊபர் வாகனங்கள் பறிமுதல்; மந்திரி ஸ்ரீராமுலு பேட்டி
x
தினத்தந்தி 8 Oct 2022 6:45 PM GMT (Updated: 8 Oct 2022 6:45 PM GMT)

போக்குவரத்து துறையின் உத்தரவுகளை மீறும் ஓலா, ஊபர் நிறுவனங்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக மந்திரி ஸ்ரீராமுலு கூறியுள்ளார்.

பெங்களூரு:

ஆட்டோக்களுக்கு தடை

கர்நாடகத்தில் ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்கள் கார்களை மட்டுமே வாடகைக்கு இயக்க போக்குவரத்து துறை அனுமதி அளித்து உள்ளது. ஆனால் போக்குவரத்து துறையின் அனுமதி பெறாமல் ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்கள் ஆட்டோக்களை இயக்கி வந்தன. இந்த ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.100 வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து போக்குவரத்து துறைக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதனால் கர்நாடகத்தில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் வாடகை ஆட்டோக்களை இயக்க தடை விதித்து நேற்று முன்தினம் கர்நாடக போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து இருந்தது.

பறிமுதல் செய்ய உத்தரவு

இதுகுறித்து கர்நாடக போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலுவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்கையில் கூறியதாவது:-

ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு வாடகை கார்களை இயக்க மட்டுமே அனுமதி வழங்கி உள்ளோம். ஆட்டோக்களை இயக்க நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை. போக்குவரத்து துறையின் உத்தரவுகளை மீறும் ஓலா, ஊபர் நிறுவனங்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். பொதுமக்களின் புகார்கள் அடிப்படையில் ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் சேவை வழங்க ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளோம். பொதுமக்களின் புகார் மற்றும் நாங்கள் அனுப்பிய நோட்டீசுக்கு ஓலா, ஊபர் நிறுவனங்கள் அளிக்கும் பதில் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க எந்த தடையும் இல்லை. சில மாநிலங்கள் 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீட்டை உயர்த்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story