தலைமை நீதிபதி ரமணா மக்களின் நீதிபதியாக திகழ்ந்தவர்: கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்த துஷ்யந்த் தவே!


தலைமை நீதிபதி ரமணா மக்களின் நீதிபதியாக திகழ்ந்தவர்: கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்த துஷ்யந்த் தவே!
x
தினத்தந்தி 26 Aug 2022 8:16 AM GMT (Updated: 26 Aug 2022 8:18 AM GMT)

மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தலைமை நீதிபதி என் வி ரமணாவிற்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு 48வது தலைமை நீதிபதியாக 16 மாத காலத்தை நிறைவு செய்துள்ள நீதிபதி என் வி ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

இந்த நிலையில், மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தலைமை நீதிபதி என் வி ரமணாவிற்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நீதிபதி என் வி ரமணா நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையே சமநிலையை சரியாக பராமரித்து வந்தார். தலைமை நீதிபதி ரமணா குடிமக்களின் நீதிபதி என்று துஷ்யந்த் தவே வர்ணித்தார்.

துஷ்யந்த் தவே கூறியதாவது:-

"இந்த நாட்டின் ஏராளமான குடிமக்கள் சார்பாக நான் பேசுகிறேன். நீங்கள் அவர்களுக்காக எழுந்து நின்றீர்கள். அவர்களின் உரிமைகளையும் அரசியலமைப்பையும் நிலைநாட்டினீர்கள்.

நீங்கள் பொறுப்பேற்றதும், நீதிமன்ற போக்கு குறித்து எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், நீங்கள் எங்கள் எதிர்பார்ப்புகளை மிஞ்சியுள்ளீர்கள். நீதித்துறை, செயல்பாடு மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு இடையே நீங்கள் ஒன்றின் அதிகாரம் மற்றொன்றை மிஞ்சாமல் சமநிலையையும் பேணி வந்தீர்கள். நீங்கள் முதுகெலும்பு உள்ள நபராக துணிவுடன் செயல்பட்டீர்கள்."

இவ்வாறு அவர் பேசி முடித்துவிட்டு உணர்ச்சி வசத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பேசுகையில், "பரபரப்பான நேரங்களிலும் சமநிலையை பேணுவதற்கு அவர் ஆற்றிய பணிக்காக நீதிமன்றம் அவரை என்றும் நினைவில் கொள்ளும். நீதிபதிகளின் குடும்பத்தையும் ரமணா நன்றாக கவனித்து வந்தார். இந்த நீதிமன்றத்தின் கண்ணியமும் ஒருமைப்பாடும் பேணப்படுவதை உறுதி செய்துள்ளீர்கள்.." என்று பாராட்டினார்.


Next Story