ஷரத்தா கொலை வழக்கு: அப்தாப்பிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை நிறைவு


ஷரத்தா கொலை வழக்கு: அப்தாப்பிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை நிறைவு
x

ஷரத்தா கொலை வழக்கில் குற்றவாளி அப்தாப்பிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை நிறைவு பெற்றதாக டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் வசாயை சேர்ந்த மும்பை கால்சென்டர் ஊழியர் ஷரத்தா கடந்த மே மாதம் அவரது காதலன் அப்தாப் அமீனால் டெல்லியில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். பின்னர் உடலை 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசியதாக கூறப்படுகிறது. கொடூரமாக நடைபெற்ற இந்தக் கொலை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஷரத்தாவை காணவில்லை என அவரது தந்தை புகார் அளித்தது தொடர்பாக வசாய் மாணிக்பூர் போலீசார், டெல்லி மெக்ராலி போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடத்தல் வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், கடந்த 10-ந் தேதி முக்கிய குற்றவாளியாக சந்தேகப்படும் அப்தாப் அமீனை அவரது வீட்டில் பிடித்தனர்.

பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அப்தாப்பிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஷாரத்தாவை கொலை செய்தது ஏன்? என்பது உள்ளிட்ட வழக்குக்கு தேவையான கேள்விகள், அவரிடம் கேட்கப்பட்டது.

அப்தாப் பொய் சொல்கிறாரா என்பதை கண்டறியும் 'பாலிகிராப்' சோதனை கடந்த சில நாட்களுக்கு அவருக்கு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நார்கோ சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று காலை நார்கோ சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் பல்வேறு உண்மைகள் தெரியவரும் என்று போலீசார் நம்புகின்றன. இந்த நிலையில், அப்தாப்பிற்கு நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை நிறைவு பெற்றதாக டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Next Story