மும்பை வெடிகுண்டு தாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்டவர்களுக்கு சிவசேனா ஆதரவு; டுவிட்டரில் ஷிண்டே பதிவு


மும்பை வெடிகுண்டு தாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்டவர்களுக்கு சிவசேனா ஆதரவு; டுவிட்டரில் ஷிண்டே பதிவு
x

மும்பை வெடிகுண்டு தாக்குதல், தாவூத் இப்ராகிமுடன் நேரடி தொடர்பு கொண்டவர்களுக்கு சிவசேனா ஆதரவு வழங்குகிறது என ஏக்நாத் ஷிண்டே டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.





புனே,



மராட்டியத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா ஆட்சி நடந்து வரும் சூழலில், கடந்த சில நாட்களாக மராட்டிய மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஓரணியில் திரண்டு உள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள புளூ ரேடிசன் ஓட்டலில், சிவசேனா மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், ஆளும் அரசுக்கு எதிராக மறைமுக போர்க்கொடியை உயர்த்தி உள்ளனர். அவர்களை ஆலோசனை நடத்த மும்பைக்கு வரும்படி, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அழைப்பு விடுத்தும் பலனில்லை. கூட்டணி மீது அதிருப்தி தெரிவித்ததுடன், கூட்டணியை விட்டு வெளியே வரும்படி சிவசேனாவுக்கு ஷிண்டே அழைப்பு விடுத்து உள்ளார்.

கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த ஷிண்டே, சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அஜய் சவுத்ரியை பதவியில் அமர்த்த முடிவாகி உள்ளது. ஷிண்டே, மொத்தமுள்ள 55 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் தனக்கு ஆதரவாக உள்ளனர். தவிர 12 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் உடன் உள்ளனர் என கூறியுள்ளார். ஷிண்டே தலைமையிலான குழுவுக்கு சிவசேனா பாலாசாகேப் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மகா விகாஸ் அகாடி அரசின் பிடியில் இருந்து சிவசேனா மற்றும் அதன் தொண்டர்களை விடுவிக்க நான் விரும்புகிறேன். இதனை சிவசேனா தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே நான் போராடி வருகிறேன். இந்த போரானது, கட்சி தொண்டர்களின் முன்னேற்றத்திற்காக என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து உள்ளார்.

மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் போர்னரே, மங்கேஷ் குடல்கர், சஞ்சய் ஷிர்சாட், லதாபாய் சோனவானே, பிரகாஷ் சுர்வே உள்ளிட்ட 15 பேருக்கு மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டன.

இந்த சூழலில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறும்போது, அசாமில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் உயிருடன் இல்லை. அவர்களது உயிரற்ற உடல்களே மராட்டியத்திற்கு திரும்பும். அவர்களது ஆன்மாக்கள் இறந்து விட்டன. அசாமின் கவுகாத்தியில் இருந்து புறப்படும்போது, மனதளவில் அவர்கள் உயிருடன் இருக்கமாட்டார்கள். பற்ற வைத்து எரிந்து கொண்டிருக்கின்ற நெருப்பில் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்.

அசாமில் இருந்த வந்து சேரும் ஆன்மாக்கள் இல்லாத உடல்கள் நேரடியாக பிரேத பரிசோதனைக்காக மராட்டிய சட்டசபைக்கு அனுப்பப்படும் என அவர் எச்சரிக்கை விடும் வகையில் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், பாலாசாகேப் தாக்கரேவின் சிவசேனா, மும்பை வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள், தாவூத் இப்ராகிம் மற்றும் மும்பையில் ஒன்றுமறியாத மக்களை கொலை செய்ததற்கு பொறுப்பானவர்களுக்கு ஆதரவு வழங்கியது எந்த வகையில் சரி? அதனாலேயே நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். அதற்கு பதில் இறப்பதே மேல் என தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அவர், இந்துத்துவா கொள்கையை பின்பற்றுவதற்காக உயிரிழக்க நேரிட்டால், அதனை எங்களது (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்) விதியாக எடுத்து கொள்வோம் என்று தெரிவித்து உள்ளார். மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுடனும் ஷிண்டே தொலைபேசியில் 2 முறை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.


Next Story