அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம்களை சித்தராமையா ஆதரிக்கிறார்- மந்திரி அரக ஞானேந்திரா குற்றச்சாட்டு


அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம்களை சித்தராமையா ஆதரிக்கிறார்- மந்திரி அரக ஞானேந்திரா குற்றச்சாட்டு
x

அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம்களை சித்தராமையா ஆதரிக்கிறார் என்று மந்திரி அரக ஞானேந்திரா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

சிவமொக்கா: கர்நாடக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா சிவமொக்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியில் வீரசாவர்க்கர் படம் வைத்தது ஏன் என்று சித்தராமையா கேள்வி கேட்டுள்ளார். இது இந்தியா, வெளிநாடு அல்ல. நமது விடுதலை போராட்ட வீரர்களின் படத்தை எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைக்க உரிமை உள்ளது. அடுத்த சட்டசபை தேர்தலில் முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சித்தராமையா கருத்து கூறியுள்ளார். இது சரியல்ல.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் கணவர் ஷெரீப் என்பவர் கடந்த 13-ந் தேதி வீரசாவர்க்கர் குறித்து தரம் தாழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. சுதந்திர போராட்டம் நடைபெற்றபோது வீரசாவர்க்கர் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தார். ஆனால் அவர் ஆங்கிலேயர்களின் ஷூ-வை நாவால் சுத்தம் செய்தார் என்று அந்த நபர் கூறிய கருத்தை ஏற்கவே முடியாது. வீரசாவர்க்கர் குறித்து சித்தராமையாவுக்கு எதுவும் தெரியாது. அரசியல் ஆதாயத்திற்காக அவர், முஸ்லிம்களை ஆதரிக்கிறார்.

இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.


Next Story