கர்நாடகத்தில் எங்கு போட்டியிட்டாலும் சித்தராமையா தோல்வி அடைவார்; மந்திரி அசோக் பேட்டி


கர்நாடகத்தில் எங்கு போட்டியிட்டாலும் சித்தராமையா தோல்வி அடைவார்; மந்திரி அசோக் பேட்டி
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:45 PM GMT)

கர்நாடகத்தில் எங்கு போட்டியிட்டாலும் சித்தராமையா தோல்வி அடைவார் என்று மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

மந்திரி அசோக்

முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். தற்போது காங்கிரஸ் தலைமையின் உத்தரவால் அவர் கோலாரில் இருந்து வருணா தொகுதியில் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பெங்களூருவில் வருவாய்த்துறை மந்திரி அசோக்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

தோல்வி உறுதி

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தொகுதிகளை தேடி அலைவதில் தனது நேரத்தை வீணடித்து வருகிறார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பாதாமி மக்களும் தற்போது அவரை விரட்டியதால், கோலாரில் போட்டியிட முடிவு செய்தார். கோலாரிலும் தோல்வி அடைந்து விடுவோம் என்பதால் வருணா தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறார். அங்கும் அவரை தோற்கடிக்க, எதிரிகள் தயாராக உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிரிகள் உள்ளனர்.

வருணா தொகுதி மட்டும் இல்லை, மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் எங்கு போட்டியிட்டாலும் சித்தராமையா தோல்வி அடைவது உறுதி. சித்தராமையாவை வெற்றி பெற டி.கே.சிவக்குமார் விடுவதில்லை. வேண்டும் என்றால் அவர் வெளிமாநிலங்கள், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று தேர்தலில் போட்டியிடலாம்.

இவ்வாறு மந்திரி அசோக் கூறினார்.


Next Story