சிக்கிம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு - மாயமான 98 பேரை தேடும் பணிகள் தீவிரம்


சிக்கிம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு - மாயமான 98 பேரை தேடும் பணிகள் தீவிரம்
x

சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 98 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

காங்டாக்,

சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள லாச்சன் பள்ளத்தாக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேகவெடிப்பு ஏற்பட்டது. லோனாக் ஏரி அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த மேகவெடிப்பால் குறுகிய நேரத்தில் அதீத கனமழை கொட்டித்தீர்த்தது.

இந்த பேய் மழையால் அங்குள்ள டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் இருபுறமும் உள்ள கரைகளை உடைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்த பெரு வெள்ளம் கிராமங்கள் மற்றும் நகரங்களை மூழ்கடித்து சுங்தாங் அணையை சென்றடைந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்ததால் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக அணையின் கீழ் உள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் 22 ராணுவ வீரர்கள் உள்பட ஏராளமானோர் அடித்து செல்லப்பட்டனர்.

இந்த வெள்ளப்பெருக்கால் பாக்யாங், காங்டாக், நாம்சி, மங்கன் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மங்கன் மாவட்டத்தின் சுங்தாங் நகரம் மிகவும் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அந்த நகரின் 80 சதவீத பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

மங்கன், காங்டாக் மற்றும் நாம்சி ஆகிய மாவட்டங்களில் 11 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள், குடிநீர் குழாய்கள், கழிவுநீர் பாதைகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் முழுமையாக சேதமடைந்தன. சிக்கிமில் மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

22 ராணுவ வீரர்கள் உள்பட 98 பேரின் கதி என்ன? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனினும் மாயமானவர்களை தேடும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மழை, வெள்ளத்தால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்ட மாநில முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங், மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருவதாக அவர் உறுதியளித்தார்.

மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் தொடர்பாக முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங், மத்திய அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கூறிய அதிகாரிகள், அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசி நிலைமையை எடுத்துரைத்ததாகவும், மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய பிரதமர் உறுதியளித்ததாகவும் தெரிவித்தனர்.


Next Story