கழுத்தை அறுத்து பெண் படுகொலை


கழுத்தை அறுத்து பெண் படுகொலை
x

மண்டியாவில் குடும்ப தகராறில் கழுத்தை அறுத்து பெண்ணை படுகொலை செய்த அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மண்டியா:-

குடும்ப பிரச்சினை

மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா கல்கெரே கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் (வயது 33). இவரது மனைவி சவுமியா (23). இவருக்கு மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா கொங்ஹள்ளி சொந்த ஊராகும். இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ளான்.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல் நேற்று முன்தினமும் அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

கழுத்தை அறுத்து கொலை

இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ், மனைவி சவுமியாவை சரமாரியாக தாக்கினார். ஆனாலும் ஆத்திரம் தீராத அவர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சவுமியாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் சவுமியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கணேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இதுபற்றி பாண்டவபுரா போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான சவுமியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் மனைவி சவுமியாவை கணேஷ் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கணேசை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தாய் இறந்ததாலும், தந்தை தலைமறைவாக உள்ளதாலும் அவர்களின் 4 வயது மகன் அனாதையாகி உள்ளான். அந்த சிறுவனை போலீசார் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.


Next Story