புதிய நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட அரசியல்சாசன நகல்களில் 'மதசார்பற்ற', 'சமத்துவம்' வார்த்தைகள் இல்லை - காங்கிரஸ் குற்றச்சாட்டு


புதிய நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட அரசியல்சாசன நகல்களில் மதசார்பற்ற, சமத்துவம் வார்த்தைகள் இல்லை - காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Sep 2023 1:53 AM GMT (Updated: 21 Sep 2023 6:57 AM GMT)

புதிய நாடாளுமன்றத்தில் முதல் நாளில் எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட அரசியல்சாசன நகல்களில் 'மதசார்பற்ற', 'சமத்துவம்' போன்ற வார்த்தைகள் இல்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் நேற்று முன்தினம் முதல் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. இந்த புதிய கட்டிடத்தில் அலுவல்கள் தொடங்கிய முதல் நாளில் எம்.பி.க்களுக்கு அரசியல் சாசனத்தின் நகல்கள் வழங்கப்பட்டு இருந்தன. அதன் முன்னுரையில், 'மதசார்பற்ற', 'சமத்துவம்' போன்ற வார்த்தைகள் இல்லை எனவும், மத்திய அரசு அவற்றை நீக்கி இருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் நாங்கள் கொண்டு சென்ற அரசியல்சாசன நகல்களின் முன்னுரையில் 'மதசார்பற்ற', 'சமத்துவம்' போன்ற வார்த்தைகள் இல்லை. அவர்கள் (மத்திய அரசு) புத்திசாலித்தனமாக அவற்றை நீக்கி உள்ளனர். இது மிகவும் தீவிர விவகாரம். இதை நாங்கள் எழுப்புவோம்' என தெரிவித்தார்.

ஆனால் இதுகுறித்து மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மெக்வால் கூறுகையில், 'எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட நகல்கள் அசல் அரசியல் சாசனத்தின் நகல்கள். இந்த வார்த்தைகள் பிறகு சேர்க்கப்பட்டவைதான்' எனக்கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, 'அரசியல் சாசனத்தில் மேற்படி வார்த்தைகள் 1976-ல் சேர்க்கப்பட்டது என்பது எனக்கும் தெரியும். ஆனால் இன்று ஒருவருக்கு அரசியல் சாசன நகல் வழங்கப்பட்டால், அது இன்றைய பதிப்பாகவே இருக்க வேண்டும்' என்று தெரிவித்தார். என்னை பொறுத்தவரை இது ஒரு மிகவும் தீவிர பிரச்சினை எனக்கூறிய சவுத்ரி, இந்த விவகாரத்தில் அவர்களது நோக்கம் தெளிவாக இல்லை என்பதால், இது குறித்து சந்தேகப்படுகிறேன் என்றும் கூறினார்.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினோய் விஸ்வமும் இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக சாடினார். இந்த வார்த்தைகள் நீக்கியது ஒரு குற்றம் எனவும் அவர் தெரிவித்தார். இதைப்போல பல்வேறு எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு மத்திய அரசை குறைகூறி வருகின்றனர்.


Next Story