இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உதவி செயலாளர் இடைநீக்கம் - விளையாட்டுத்துறை அமைச்சகம் நடவடிக்கை


இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உதவி செயலாளர் இடைநீக்கம் - விளையாட்டுத்துறை அமைச்சகம் நடவடிக்கை
x

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) உதவி செயலாளர் வினோத் தோமரை விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவர் மீது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் குற்றச்சாட்டு கூறி கடந்த சில நாட்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களில், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், தீபக் பூனியா, ரவி தஹியா உள்ளிட்ட இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகளும் அடங்குவர். அதில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கை பதவி விலக வலியுறுத்தியும், அவரை கைது செய்யவும், புதிய நிர்வாகம் உருவாக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் நேற்று 3-வதுநாளாக தொடர்ந்தது. இதற்கிடையே போராட்டம் நடத்தியவர்களில் இருந்து பஜ்ரங் புனியா, ரவி தகியா, சாக் ஷி மாலிக், வினேஷ்போகத் ஆகியோர் நேற்று இரவு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குரை நேரில் சந்தித்து பேசினர். சுமார் ஏழு மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உடனடியாக கலைக்கவேண்டும் என வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர்.

நள்ளிரவும் கூட்டம் தொடர்ந்து நடந்தது. கூட்டத்தின் முடிவில் வீராங்கனைகளுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் அனுராக் தாக்குர். அப்போது இந்த விவகாரத்தில் விசாரணை முடியும் வரை மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் ஒதுங்கி இருப்பார் என்று அனுராக் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வீராங்கனைகள் அறிவித்தனர்.

தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு மேற்பார்வைக் குழுவை அமைப்பதாக அனுராக் தாக்குர் அறிவித்தார் மேலும் நான்கு வாரங்களில் நீதி வெல்லும் என்று உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளன துணை செயலாளர் வினோத் தோமர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தவிர குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வினோத் தோமர் இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குடன் நெருக்கமாக பணியாற்றி வந்தார் என்றும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட விவகாரங்களைக் கவனித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story