12-வது மாடியில் இருந்து குதித்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை


12-வது மாடியில் இருந்து குதித்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 29 Aug 2023 6:45 PM GMT (Updated: 29 Aug 2023 6:46 PM GMT)

12-வது மாடியில் இருந்து குதித்து தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

பெல்லந்தூர்:-

தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்

பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது பெற்றோருடன் வசித்து வந்தவர் ஜெசிகா என்ற 14 வயது சிறுமி. சிறுமியின் தந்தை, அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். தாய் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஜெசிகா அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். இவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். கடந்த 2 ஆண்டுகளாக இந்த குடியிருப்பில் தங்கி உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக மாணவி மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று ஜெசிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது குடியிருப்பின் 12-வது மாடிக்கு சிறுமி சென்றாள். தீடீரென அங்கிருந்து கீழே குதித்து சிறுமி ஜெசிகா தற்கொலை செய்து கொண்டாள். இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மனஉளைச்சல்

உடனே அவர்கள் பெல்லந்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து ஜெசிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி ஜெசிகா கடந்த 3 மாதங்களில் 6 நாட்கள் மட்டுமே பள்ளிக்கு சென்றது தெரிந்தது.

இதுபற்றி ஒயிட்பீல்டு துணை போலீஸ் கமிஷனர் கிரிஷ் நிருபர்களிடம் கூறுகையில், 'சம்பவத்தன்று ஜெசிகா பள்ளிக்கு வராதது குறித்து அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் கொடுத்துள்ளது. உடனே அவர்கள் வீட்டிற்கு வந்து ஜெசிகாவை தேடி உள்ளனர். அப்போது ஜெசிகா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றார்.


Next Story