விவசாய நிலத்திற்கு வரைபடம் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது


விவசாய நிலத்திற்கு வரைபடம் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது
x

விவசாய நிலத்திற்கு வரைபடம் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு;

37 ஏக்கர் நிலம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கோனிபீடு அருகே உள்ள அக்ரஹார கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 37 ஏக்கர் விளை நிலம் உள்ளது. அதில் அவர் காபி பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். இந்த நிலையில் தனது நிலத்திற்கு வரைபடம் பெறுவதற்காக அவர் மூடிகெரே தாலுகா அலுவலத்திற்கு சென்றார்.

அவர் வரைபடம் பெறுவதற்கான விண்ணப்பத்தை தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணி செய்யும் பிரகாசிடம் கொடுத்தார். அப்போது பிரகாஸ் அவரது விண்ணப்பத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது.


இதுகுறித்து பிரகாசிடம், மகேஷ் கேட்டபோது தனக்கு ரூ.4 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் வரைபடம் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் நில அளவையர் லஞ்சம் கேட்பது குறித்து மூடிகெரே ஊழல் தடுப்பு போலீசில் புகார் அளித்தார்.

ரூ.1 லட்சம் பறிமுதல்

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மகேசிடம் ரசாயன பொடி தடவிய ரூ.1 லட்சத்தை கொடுத்து, சில அறிவுரைகளை வழங்கி அனுப்பினர். தாலுகா அலுவலகத்திற்கு வந்த மகேஷ், நில அளவையர் பிரகாசிடம் ரசாயனம் தடவிய ரூ.1 லட்சத்தை கொடுத்தார்.

மேலும், பாக்கி பணத்தை விரைவில் கொடுப்பதாக கூறியுள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு போலீசார் நில அளவையரை கையும், களவுமாக பிடித்தனர்.


மேலும், அவரிடம் இருந்து லஞ்ச பணம் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சர்வேயர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story