ஆசிரியர் பணி நியமன ஊழல்: திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது; அமலாக்க துறை நடவடிக்கை


ஆசிரியர் பணி நியமன ஊழல்:  திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது; அமலாக்க துறை நடவடிக்கை
x

மேற்கு வங்காளத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்புடைய வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை அமலாக்க துறை கைது செய்துள்ளது.


கொல்கத்தா,


மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக செயல்பட்டு வந்தவர் பார்த்தா சாட்டர்ஜி (வயது 69).

இவர் கடந்த 2014 முதல் 2021-ம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு, ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து அமலாக்க துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அந்த வகையில், கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள மந்திரி பார்த்தாவின் வீட்டில் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். பார்த்தாவின் உதவியாளரான நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில், பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் வீட்டில் இருந்து 49.80 கோடி ரூபாய் பணம், 5.20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள், நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் மேற்கு வங்காள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியை அமலாக்க துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் அமலாக்க துறை தொடர் விசாரணை நடத்தி வருகிறது. இதில், மேற்கு வங்காள முதன்மை கல்வி வாரிய முன்னாள் தலைவர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான மாணிக் பட்டாச்சார்யா என்பவரை தன்னுடைய விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து நேற்றிரவு அமலாக்க துறை விசாரித்தது.

இதனடிப்படையில், அவரை அமலாக்க துறை இன்று கைது செய்துள்ளது. இதன்பின்னர் அவர் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதனால், மம்தா பானர்ஜிக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.


Next Story