கோவிலில் ஆண் நண்பருடன் இளம்பெண் சுட்டுக்கொலை: வெறிச்செயலில் ஈடுபட்ட மற்றொரு நண்பர் தற்கொலை


கோவிலில் ஆண் நண்பருடன் இளம்பெண் சுட்டுக்கொலை: வெறிச்செயலில் ஈடுபட்ட மற்றொரு நண்பர் தற்கொலை
x
தினத்தந்தி 5 April 2024 10:15 PM GMT (Updated: 5 April 2024 10:15 PM GMT)

மத்தியபிரதேசத்தில் கோவிலில் ஆண் நண்பருடன் இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட மற்றொரு நண்பர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தூர்,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண் சினேகா ஜாட். இவர் அங்குள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்து வந்த தீபக் ஜாட் (25) மற்றும் அபிஷேக் யாதவ் (26) ஆகிய இருவரும் சினேகாவின் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். தீபக், சினேகாவின் தூரத்து உறவினரும் ஆவார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சினேகா வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றார். அவர் வகுப்பில் இருந்தபோது அபிஷேக் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு வரும்படி கூறினார். அதை தொடர்ந்து சினேகா கல்லூரியில் தீபக்கை சந்தித்து, கோவிலில் அபிஷேக் காத்திருப்பதாகவும், அங்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, சினேகாவும், தீபக்கும் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்றனர்.

அங்கு சினேகா, தீபக், அபிஷேக் ஆகிய 3 பேரும் சாமி தரிசனம் செய்துவிட்டு பேசிக்கொண்டே கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தனர். அப்போது அபிஷேக் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த சினேகா, தீபக் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். ஆனால் அபிஷேக் அவர்களை குருவியை சுடுவதுபோல சுட்டுத்தள்ளினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவரும் இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்து திகைத்து நின்றனர்.

இதனிடையே நண்பர்கள் இருவரையும் ஈவுஇரக்கமின்றி சுட்டுக்கொலை செய்த அபிஷேக் அங்கிருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று கோவில் வளாகத்துக்குள்ளேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முக்கோண காதல் விவகாரத்தில் இந்த இரட்டை கொலை மற்றும் தற்கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story