தொழிலாளியை கொல்ல முயன்ற வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை


தொழிலாளியை கொல்ல முயன்ற வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 5 Nov 2022 7:00 PM GMT (Updated: 5 Nov 2022 7:01 PM GMT)

தொழிலாளியை கொல்ல முயன்ற வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சிவமொக்கா;

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா காகே கோடமக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜமீல். இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் தொழிலாளியான சையது முஸ்தாக் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந்ேததி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது தகராறு முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த ஜமீல், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சையது முஸ்தாக்கை சரமாரியாக குத்தினார்.இதில் சையது பயங்கர கத்திக்குத்து காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பத்ராவதி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுதொடா்பாக பத்ராவதி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜமீைல கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு சிவமொக்கா கோர்ட்டில் நடந்து வந்தது. இதுகுறித்து போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சசிதர் தீர்ப்பு வழங்கினார். அதில் ஜமீல் மீதான குற்றம் நிரூபணமானதால் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


Next Story