ஜார்கண்ட் முதல்-மந்திரியுடன் நிதிஷ்குமார் சந்திப்பு - தேஜஸ்வி யாதவும் உடன் சென்றார்


ஜார்கண்ட் முதல்-மந்திரியுடன் நிதிஷ்குமார் சந்திப்பு - தேஜஸ்வி யாதவும் உடன் சென்றார்
x

ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரனை நிதிஷ்குமார் சந்தித்தார்.

ராஞ்சி,

அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.

சமீபத்தில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை நிதிஷ்குமார் சந்தித்தார்.

அகிலேஷ் யாதவுடன் சேர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தார்.

அப்போது, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்ட உறுதி பூண்டனர்.

நேற்று முன்தினம் ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை நிதிஷ்குமார் சந்தித்தார்.

ஹேமந்த் சோரன்

இந்நிலையில், நேற்று ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு நிதிஷ்குமாரும், பீகார் மாநில துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவும் சென்றனர். அங்கு முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் வீட்டுக்கு இருவரும் சென்றனர்.

ஹேமந்த் சோரனை சந்தித்து பேசினர். அரசியல் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செய்தித்தொடர்பாளர் வினோத்குமார் பாண்டே கூறினார்.


Next Story