வாலிபரை கொன்று உடலை எரித்த தந்தை-அண்ணன்


வாலிபரை கொன்று உடலை எரித்த தந்தை-அண்ணன்
x

பெலகாவியில், குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை அவரது தந்தையும், அண்ணனும் சேர்ந்து கொன்று உடலை எரித்தனர். பின்னர் அவர்கள் தப்பி ஓடியபோது கிராம மக்கள் அவர்களை மடக்கிப்பிடித்தனர்.

பெங்களூரு:-

கூலித்தொழிலாளி

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கோகாக் தாலுகா இடகல் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கய்யா குருசித்தய்யா ஹிரேமட்(வயது 56). இவரது மகன்கள் பசவய்யா ஹிரேமட்(26) மற்றும் சோமய்யா ஹிரேமட்(24). இதில் கூலித்தொழில் செய்து வந்த சோமய்யா மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாகவும், அவர் அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தனது தந்தையிடம் மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவும் சோமய்யா மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவர் தனது தந்தையிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும் அவர் தனது தந்தையை தாக்கினார்.

பெட்ரோல் ஊற்றி எரிப்பு

இதனால் கடும் கோபம் அடைந்த மகாலிங்கய்யா, தனது மூத்த மகன் பசவய்யாவுடன் சேர்ந்து 2-வது மகன் சோமய்யாவை சரமாரியாக தாக்கினார். மேலும் இருவரும் உருட்டுக்கட்டையை எடுத்து சோமய்யாவியின் தலையில் பயங்கரமாக தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் சோமய்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலையை மறைக்க திட்டமிட்ட அவர்கள் இருவரும் வீட்டின் பின்புறம் யாருக்கும் தெரியாமல் சோமய்யாவின் உடலை போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

இதற்கிடையே துர்நாற்றம் வீசவே அங்கு வந்த கிராம மக்கள் இதுபற்றி கோகாக் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் பட்டீல் மற்றும் கோகாக் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தப்பி ஓட முயன்றனர்

போலீசார் வருவதை அறிந்த மகாலிங்கய்யாவும், அவரது மூத்த மகன் பசவய்யாவும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது அவர்களை கிராம மக்கள் மடக்கிப்பிடித்தனர். இதற்கிடையே போலீசார் அங்கு வந்தனர். அவர்களிடம் கிராம மக்கள் மகாலிங்கய்யா மற்றும் பசவய்யா ஆகிய 2 பேரையும் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் பாதியளவு எரிந்த நிலையில் கிடந்த சோமய்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலிங்கய்யா மற்றும் பசவய்யா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மதுகுடித்துவிட்டு தகராறு செய்த மகனை தந்தையும், சகோதரனும் சேர்ந்து கொன்று உடலை எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story