பெண்ணை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது


பெண்ணை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது
x
தினத்தந்தி 19 Aug 2023 6:45 PM GMT (Updated: 19 Aug 2023 6:45 PM GMT)

சிவமொக்காவில் பெண்ணை அடித்து கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியதால், கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

சிவமொக்கா :-

சிறுத்தை

சிவமொக்கா(மாவட்டம்) தாலுகா பிக்கோனஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி கிராமத்தில் நுழைந்து கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை அடித்து கொன்றது.

இதனால் அப்பகுதி மக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்து வந்தனர். அந்த கோரிக்கைகளை ஏற்ற வனத்துறையினர் 4 இடங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர்.

கூண்டில் சிக்கியது

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது. காலையில் இதை பார்த்த மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்து கூண்டில் சிக்கிய சிறுத்தையை தியாவரேகொப்பா வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்று விட்டனர்.

பின்னர் அந்த சிறுத்தையை பெங்களூருவில் உள்ள பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். பெண்ணை கொன்று 15 நாட்கள் கழித்து அந்த சிறுத்தை கூண்டில் சிக்கி உள்ளது.

அந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனா்.


Next Story