வியாபாரி, அரிவாளால் வெட்டி படுகொலை


வியாபாரி, அரிவாளால் வெட்டி படுகொலை
x
தினத்தந்தி 13 March 2023 4:30 AM GMT (Updated: 13 March 2023 4:35 AM GMT)

கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் வியாபாரி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.

சிக்கமகளூரு-

ரூ.1 லட்சம் கடன்

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா விட்டலமக்கி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி சுகுணா. இந்த நிலையில் அதேப்பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 48) என்பவரிடம் ராஜகோபால் ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் கடன் வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் ராஜகோபால், வாங்கிய பணத்தையும், வட்டியையும் திரும்ப கொடுக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து சங்கர் பலமுறை கடன் திரும்ப கேட்டு வந்தார். ஆனால் ராஜகோபால் காலம் கடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சங்கர், ராஜகோபாலின் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர், கொடுத்த கடனை திரும்ப கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

படுகொலை

அந்த சமயத்தில், சங்கருக்கும், ராஜகோபாலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென்று சுகுணா வீட்டில் இருந்த மிளகாய் பொடியை சங்கரின் கண்களில் தூவி உள்ளார். பின்னர், ராஜகோபாலும், சுகுணாவும் சேர்ந்து சங்கரை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் அவரை அரிவாளாலும் சரமாரியாக வெட்டினர்.

இதில் பலத்த காயம் அடைந்த சங்கர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சங்கரை மீட்டு ஆம்புலன்சில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவன்-மனைவி கைது

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கொப்பா போலீசார் ஆஸ்பத்திரிக்கும், சம்பவ இடத்துக்கும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கொடுத்த கடனை திரும்ப கேட்க சென்ற சங்கரை, கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலையும், அவரது மனைவி சுகுணாவையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story