நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18-ந்தேதி தொடக்கம் - ஆகஸ்டு 12 வரை நடக்கிறது


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18-ந்தேதி தொடக்கம் - ஆகஸ்டு 12 வரை நடக்கிறது
x

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்றம் ஆண்டுதோறும் 3 முறை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என 3 தொடர்கள் நடத்தப்படுகிறது. இதில் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை-செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதி நிறைவடைவதாக நாடாளுமன்ற செயலகம் அறிவித்து உள்ளது.

இந்த தொடரில் 18 அமர்வுகள் இடம்பெறும் என கூறப்பட்டு உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப்போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதேநேரம் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபத் திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என தெரிகிறது.

இந்த பரபரப்பான அரசியலில் சூழலில் நாடாளுமன்றம் கூடுவதால், இந்த தொடரில் கடும் புயல் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த தொடரில் சில முக்கிய நிகழ்வுகளும் அரங்கேற உள்ளன. இதில் முக்கியமாக, ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெறுவதை தொடர்ந்து, அதில் வெற்றி பெறுபவர் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 25-ந்தேதி புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

இதைப்போல ஆகஸ்டு 6-ந்தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர் ஆகஸ்டு 11-ந்தேதி அடுத்த துணை ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொள்வார். டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளை முடித்து இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அந்தவகையில் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் இந்த மழைக்கால கூட்டத்தொடராக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற செயலக அதிகாரிகள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story