பிச்சை எடுத்த அசதியில் பால்கனியில் படுத்த மூதாட்டி; பலாத்காரம் செய்த போதை ஆசாமி


பிச்சை எடுத்த அசதியில் பால்கனியில் படுத்த மூதாட்டி; பலாத்காரம் செய்த போதை ஆசாமி
x

மேற்கு வங்காளத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திய 60 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.



கொல்கத்தா,


மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் ஸ்ரீபாஷ் அங்கன் காட் சாலையில் யாரும் இல்லாத இடத்தில் தனியாக இருந்த பால்கனி ஒன்றில், பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்தி வந்த 60 வயது மூதாட்டி ஒருவர் இரவில் அசதியில் படுத்திருக்கிறார்.

அவருக்கு தங்குவதற்கு வீடு எதுவும் இல்லாத நிலையில், கிடைக்கும் இடங்களில் படுத்து கொள்வார். அப்படி படுத்திருக்கும்போது, திடீரென நள்ளிரவில் எழுந்து கத்தியிருக்கிறார். பக்கத்தில் யாரும் இல்லாத சூழலில் யார் காதிலும் விழவில்லை.

அடுத்த நாள் அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்களிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார். அவர்கள் நபத்வீப் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

போலீசார் வந்து மூதாட்டியிடம் விசாரித்து உள்ளனர். அதில், நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிய விவரம் தெரிய வந்து உள்ளது.

இதனை தொடர்ந்து, அந்த மூதாட்டி நவத்வீப் மாநில அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது நிலைமை சிகிச்சைக்கு பின் சீராக உள்ளது என மருத்துவ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலாத்காரத்தில் ஈடுபட்ட அந்த நபர் சம்பவத்தின்போது, போதையில் இருந்திருக்க கூடும் என போலீசார் கூறியுள்ளனர். ராகுல் ராய் என்ற அந்நபரை நபத்வீப் தம் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி மூதாட்டியின் உறவினர்கள் போலீசிடம் அளித்த புகாரின் பேரில், பிரிவு 376-ன் கீழ் வழக்கு பதிவு செய்து ராகுலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின், போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திய 60 வயது மூதாட்டியை போதை ஆசாமி பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.


Next Story