காதலி வீட்டாரிடம் இருந்து தப்பிக்க ஓடி... பாகிஸ்தானுக்குள் நுழைந்து கைதியான நபரின் சோக பின்னணி


காதலி வீட்டாரிடம் இருந்து தப்பிக்க ஓடி... பாகிஸ்தானுக்குள் நுழைந்து கைதியான நபரின் சோக பின்னணி
x
தினத்தந்தி 15 Feb 2023 11:52 AM GMT (Updated: 15 Feb 2023 11:54 AM GMT)

பாகிஸ்தான் சிறையில் உள்ள 700 இந்தியர்களை பாதுகாப்பாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2 ஆண்டுகளுக்கு பின் விடுதலையான நபர் கோரிக்கை விடுத்து உள்ளார்.


அமிர்தசரஸ்,


பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகர சிறையில் கெமரா ராம் மேக்வால் என்பவர் 21 மாதங்களாக அடைக்கப்பட்டு உள்ளார். இவர் ராஜஸ்தானின் பார்மர் பகுதியை சேர்ந்தவர்.

21 வயதுடைய இந்திய இளைஞரான இவர் 2 ஆண்டு சிறை வாசத்திற்கு பின்னர் அந்நாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டு உள்ளார்.

2020-ம் ஆண்டு நவம்பரில் பார்மர் மாவட்டத்தின் அருகேயுள்ள கிராமத்தில் தனது காதலியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து விட்டார். இதனை அறிந்த அவரது வீட்டார், மேக்வாலை பிடிக்க பார்த்து உள்ளனர்.

அவர்களிடம் சிக்க கூடாது என்பதற்காக தப்பி ஓடிய அவர் தவறுதலாக பாகிஸ்தான் நாட்டு எல்லை பகுதிக்குள் நுழைந்து உள்ளார். விடுதலைக்கு பின்னர் அவர் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகருக்கு வந்தவுடன் செய்தியாளர்களிடம் கூறும்போது, வீட்டுக்கு வந்தது மகிழ்ச்சி. எனினும், ஊடகம் மற்றும் அரசிடம் கோரிக்கை ஒன்றை வைக்கிறேன்.

கராச்சி சிறையில் 700 இந்தியர்கள் உள்ளனர். அவர்களை விடுவிக்க முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுக்கிறேன். விரைவில் அவர்களை விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

எல்லை கடந்து அந்நாட்டுக்குள் சென்றதற்காக கைதியாக அவர் சிறை பிடிக்கப்பட்டு உள்ளார். இதேபோன்று, ராஜூ என்ற மத்திய பிரதேச மாநில நபரான மற்றொரு கைதி, 6 ஆண்டு சிறைவாசத்திற்கு பின்னர் பாகிஸ்தான் நாட்டில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டு உள்ளார்.

இவர்கள் 2 பேரும், தவறுதலாக பாகிஸ்தானிய எல்லைக்குள் நுழைந்து உள்ளனர் என அட்டாரி வாகா எல்லை பணியில் உள்ள அதிகாரி அருண் மஹால் கூறியுள்ளார். அதன்பின் அவர்கள் பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2 பேரும் முறைப்படி இன்று அவர்களது குடும்பத்தினரும் ஒப்படைக்கப்படுகின்றனர்.


Next Story