ஆயுதங்களால் தாக்கி வாலிபர் படுகொலை


ஆயுதங்களால் தாக்கி வாலிபர் படுகொலை
x

பெங்களூருவில் பட்டப்பகலில் ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூரு:-

வாலிபர் கொலை

பெங்களூரு பசவனகுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோஷி தெருவில் வசித்து வந்தவர் அர்பாஸ் (வயது 26). இவர், நேற்று மதியம் 1.30 மணியளவில் தன்னுடைய வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் திடீரென்று அர்பாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அர்பாசை சரமாரியாக தாக்கினார்கள்.

இதில், பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி சென்று விட்டனர். உடனே அங்கிருந்தவர்கள் அர்பாசை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

முன்விரோதம் காரணமாக...

இதுபற்றி தகவல் அறிந்ததும் பசவனகுடி போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டும், அர்பாஸ் உடலை கைப்பற்றியும் விசாரித்தனர். மேலும் தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். அப்போது திப்பு நகரை சேர்ந்த மோசின், அவரது கூட்டாளிகள் சேர்ந்து அர்பாசை கொலை செய்தது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து பசவனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மோசின் உள்ளிட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story