ராணுவத்தை வலுவிழக்க செய்துவிட்டு தங்களை தேசியவாதிகள் என்கின்றனர் - பாஜக மீது ராகுல் விமர்சனம்


ராணுவத்தை வலுவிழக்க செய்துவிட்டு தங்களை தேசியவாதிகள் என்கின்றனர் - பாஜக மீது ராகுல் விமர்சனம்
x

நாட்டின் ராணுவத்தை பாஜக வலுவிழக்க செய்கிறது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

முப்படைகளில் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் பணி என்ற அடிப்படையில் ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்க்கும் நடைமுறைகளை ராணுவம், கடற்படை தொடங்கிவிட்டது. இதற்கான அறிவிப்புகளை முப்படைகளும் வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே, அக்னிபத் திட்டத்திற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த திட்டத்தை கைவிடக்கோரி காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ராணுவத்தில் ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் குறித்து பாஜக பேசி வந்தது. ஆனால், தற்போது, பதவியும் இல்லை, ஓய்வூதியமும் இல்லை. இளைஞர்கள் கடுமையாக உழைத்துவிட்டு அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும். 4 ஆண்டுகளுக்கு பின் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் கிடைக்காது.

நாட்டின் ராணுவத்தை வலுவிழக்க செய்து வரும் பாஜக தாங்கள் தேசியவாதிகள் என கூறுக்கொள்கிறது. அக்னிபத் திட்டத்தை பிரதமர் மோடி திரும்பப்பெற வேண்டும். நாட்டின் வலிமைக்கு உண்மையான நாட்டுப்பற்று தேவை என்பதை நாட்டின் இளைஞர்கள் அறிந்துள்ளனர். இந்த திட்டம் ரத்து செய்யப்படுவதை நாம் உறுதி செய்வோம்' என்றார்.

இதையும் படிக்க... 'அக்னிபத்' திட்டம் வாபஸ் இல்லை: ஆள் சேர்ப்புக்கான அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டது


Next Story