கப்பன் பூங்காவுக்கு மக்கள் செல்ல நேரகட்டுப்பாடு


கப்பன் பூங்காவுக்கு மக்கள் செல்ல நேரகட்டுப்பாடு
x

பெங்களூரு கப்பன் பூங்காவுக்கு மாலை 6.30 மணிவரை மட்டுமே பொதுமக்கள் செல்ல நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது..

பெங்களூரு:

சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

பெங்களூரு நகரவாசிகள் பொழுதை போக்கும் பகுதியாக கப்பன்பார்க் மற்றும் லால்பாக் பூங்காக்கள் உள்ளன. அங்கு பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் தினமும் வருகை தருகிறார்கள். இதுதவிர காலை மற்றும் மாலையில் கப்பன் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக பெரும் கூட்டமே இருக்கிறது. இந்த நிலையில், பெங்களூரு கப்பன்பார்க்கில் இரவிலும் பொதுமக்கள் செல்வதற்காக அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கப்பன் பூங்காவுக்கு இரவில் பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கினால், அங்கு சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு ஏற்படும் என்றும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க சாத்தியமில்லை என்றும் சமூக ஆா்வலர்கள் குற்றச்சாட்டு கூறி வந்தனர்.

மாலை 6.30 மணிவரை அனுமதி

இந்த நிலையில், பெங்களூரு கப்பன் பூங்காவில் மாலை 6.30 மணிவரை மட்டுமே பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கி தோட்டகலைத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் இரவு 10 மணிவரை கப்பன் பூங்கா பகுதிகளில் இருக்கும் சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாலை 6.30 மணிக்கு மேல் கப்பன் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்க கூடாது என்று காவலாளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

லால்பாக்கிலும் மாலை 6.30 மணிக்கு மேல் பொதுமக்கள் இருக்க அனுமதி கிடையாது. அதுபோல், கப்பன் பூங்காவுக்கும் மாலை 6.30 மணிக்கு மேல் பொதுமக்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.


Next Story