ஜார்க்கண்ட் ரெயில் நிலையத்தில் நடந்த பயங்கரம்..! ரெயில் மோதி பலர் பலியானதாக தகவல்


ஜார்க்கண்ட் ரெயில் நிலையத்தில் நடந்த பயங்கரம்..! ரெயில் மோதி பலர் பலியானதாக தகவல்
x
தினத்தந்தி 28 Feb 2024 3:47 PM GMT (Updated: 28 Feb 2024 4:10 PM GMT)

பயணிகள் சிலர் ரெயிலில் இருந்து பிளாட்பாரத்தில் இறங்குவதற்கு பதிலாக மறுபுறம் இறங்கியபோது மற்றொரு ரெயில் மோதியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா அருகே உள்ள காலா ஜரியா ரெயில் நிலையத்தில் இன்று பயணிகள் மீது ரெயில் மோதியது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளதாக ஜம்தரா துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இரண்டு உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இதுபற்றி ஜம்தாரா சப்-டிவிஷன் போலீஸ் அதிகாரி எம்.ரஹ்மான் கூறுகையில், எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து பயணிகள் சிலர் ரெயிலில் இருந்து பிளாட்பாரத்தில் இறங்குவதற்கு பதிலாக மறுபுறம் இறங்கியதாகவும், அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த மற்றொரு ரெயில் மோதியதாகவும் தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீப்பிடித்ததாக பரவிய தகவலைத் தொடர்ந்து பீதியடைந்த பயணிகள், அவசரம் அவசரமாக இறங்க தண்டவாளத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story