சரியாக தூங்க முடியவில்லை...சேவல் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்த டாக்டர்...!


சரியாக தூங்க முடியவில்லை...சேவல் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்த டாக்டர்...!
x

வேலை முடிந்து வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கலாம் என்ற போது அண்டை வீட்டில் பெண் வளர்க்கும் சேவல் கூவி கூவி தனது தூக்கத்தை கலைத்து விடுவதாக டாக்டர் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போபால்,

அக்கம்பக்கத்தில் அதிகம் ஒலி வைத்து பாட்டு கேட்டால், ஏதேனும் பிரச்சினை நடந்தால் போலீசிடம் புகார் கொடுப்பது வழக்கம். ஆனால் தினமும் கூவும் பக்கத்து வீட்டுக்காரரின் சேவலால் எரிச்சலான டாக்டர் ஒருவர் காவல் துறையை நாடியிருப்பது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தூரைச் சேர்ந்த அலோக் மோடி என்ற டாக்டர் தான் புகார் அளித்துள்ளார். அதன்படி இந்தூரின் பலாசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் மருத்துவமனை அருகே வசித்து வருகிறார் அலோக் மோடி. அவரது புகாரில், எனது அண்டை வீட்டில் உள்ள ஒரு பெண் ஒருவர் கோழி, சேவல் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார்.

அந்த சேவல் கோழிகள் தினமும் அதிகாலை தவறாது 5 மணிக்கெல்லாம் கூவுகிறது.இதனால் வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கலாம் என்ற போது சேவல் கூவி தூக்கத்தை கலைத்து விடுகிறது. அது முற்றிலும் தமக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அலோக் மோடியின் புகாரை பலாசியா காவல் நிலைய பொறுப்பாளர் சஞ்சய் சிங் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அதனடிப்படையில், முதலில் இருதரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் சேவல் கூவும் சிக்கலை தீர்க்க குற்றவியல் நடைமுறையை பின்பற்றுவோம் என்றும், பொது இடத்தில் சட்டவிரோதமாக தொந்தரவு செய்வது என்ற சட்டப்பிரிவு 133ன் படி நடவடிக்கை எடுப்போம் என்றும் சஞ்சய் சிங் கூறியிருக்கிறார்.


Next Story