லாரி-மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பி.யூ.சி. மாணவர்கள் 3 பேர் சாவு


லாரி-மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பி.யூ.சி. மாணவர்கள் 3 பேர் சாவு
x

பத்ராவதி அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதியதில் பி.யூ.சி. மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சிவமொக்கா:

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா அரதொளலு கிராமத்தை சேர்ந்தவர் ககன் (வயது21). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ககன் வேலைக்கு சென்றார். இரவு பணிமுடிந்து அவர் வீட்டிற்கு வந்தார். பின்னர் நண்பர்களை பார்த்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு ககன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள நண்பர்களுடன் அவர் பேசி கொண்டிருந்தார். இந்தநிலையில் இரவு ஓட்டலில் உணவு சாப்பிட அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி ககன் உள்பட 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் அரதொளலு கைமரா பகுதிக்கு சென்றனர். அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள்கள் கல்லிஹால் பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற லாரியை அவர்கள் முந்தி செல்ல முயன்றனர்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்கள் தாறுமாறாக ஓடி லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் அடியில் சிக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ககன் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஹோலே ஒன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டனர். பின்னர் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக பத்ராவதி அரசு ஆஸ்பத்திரிக்கும், படுகாயமடைந்த ககனை பத்ராவதி தனியார் மருத்துவமனைக்கும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், உயிரிழந்தவர்கள் ஹளேஜம்பர்கட்டே கிராமத்தை சேர்ந்த விகாஸ் (18) யஸ்வந்த் (18), சசாங் (18) ஆகியோர் என்பதும், அவர்கள் 3 பேரும் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ. 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஹோலே ஒன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story