கர்நாடகத்தில் 3,227 குக்கிராமங்கள் வருவாய் கிராமங்களாக தரம் உயர்வு; மந்திரி ஆர்.அசோக் தகவல்


கர்நாடகத்தில் 3,227 குக்கிராமங்கள் வருவாய் கிராமங்களாக தரம் உயர்வு; மந்திரி ஆர்.அசோக் தகவல்
x

கர்நாடகத்தில், 3,227 குக்கிராமங்கள் வருவாய் கிராமங்களாக தரம் உயர்த்தப்படும் என்று மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், கர்நாடகத்தில் குறிப்பாக யாதகிரி, கலபுரகி, விஜயாப்புரா போன்ற மாவட்டங்களில் லம்பானிகள் மற்றும் குருபாஹட்டி சமூகத்தினர் குழுக்களாக வாழ்கிறார்கள். அவர்கள் வாழும் அந்த பகுதி வருவாய் கிராமங்களாக அங்கீகாரம் பெறவில்லை. அதனால் அவர்களுக்கு எந்த அடிப்படை வசதியையும் அரசால் செய்து கொடுக்க முடியவில்லை. மேலும் அந்த மக்களுக்கு தங்களின் வீட்டின் உரிமையும் கிடைக்கவில்லை. அவ்வாறு 3,227 குக்கிராமங்கள் உள்ளன.

அந்த குக்கிராமங்களை வருவாய் கிராமங்களாக தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதில் முதல்கட்டமாக 1,847 குக்கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்றுவதற்கான அரசாணையை அரசு பிறப்பித்துள்ளது. அவற்றில் 1,134 குக்கிராமங்கள் வருவாய் கிராமங்களாக மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது என்றார்.


Next Story