அரசியலமைப்பை மீறுவது மக்களின் உரிமைகளை மீறுவது ஆகும்: மம்தா பானர்ஜி பேச்சு


அரசியலமைப்பை மீறுவது மக்களின் உரிமைகளை மீறுவது ஆகும்:  மம்தா பானர்ஜி பேச்சு
x

அரசியலமைப்பை மீறுவது மக்களின் உரிமைகளை மீறுவது ஆகும் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.


கொல்கத்தா,


மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, அரசின் முகமைகளை பார்த்து பயந்து ஓடுகிறவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

ஆனால், நாங்கள் ஓடமாட்டோம். உங்களால் என்ன முடியுமோ அதனை செய்யுங்கள். எங்களிடம் உள்ள எல்லாவற்றையும் எடுத்து கொள்ளுங்கள். ஆனால், நாட்டை விற்று விடாதீர்கள்.

எங்களுக்கு பின்னால் முகமைகளை அனுப்பி சோதனையிடுங்கள். ஆனால், நாட்டை ஒற்றுமையாக இருக்க விடுங்கள். அரசியல் சாசன விதிகளை மீறுவது என்பது பொதுமக்களுக்கான விதிகளை மீறுவது ஆகும் என்று அவர் பேசியுள்ளார்.

சமீபத்தில் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சாகர்தீகி நகரில் நடந்த நிர்வாக ரீதியிலான மறுஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முதல் இடத்தில் உள்ள மேற்கு வங்காளம், மத்திய அரசின் நிதி உதவி இன்றி மாநில அரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஏன் இந்த வேற்றுமை? மத்திய அரசின் எந்தவித உதவியும் இன்றி இதனை நாங்கள் செய்து வருகிறோம். மத்திய அரசு எங்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும். ஆனால், நிதியை விடுவிக்காமல் உள்ளது. பல முறை இந்த விவகாரம் பற்றி எடுத்து உரைத்தும் அதில் பலனில்லை என்ற வேதனையுடன் குறிப்பிட்டார்.

இந்த ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியானது, மத்திய அரசின் தனிப்பட்ட நிதியல்ல. அது மாநிலத்தில் வசித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கான உரிமை. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் இந்த நிதி கிடைக்கிறது என்று மத்திய அரசை சாடும் வகையில் அவர் பேசினார்.


Next Story