100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியம் ரூ.294 ஆக உயர்வு


100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியம் ரூ.294 ஆக உயர்வு
x

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியம் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரூ.281-ல் இருந்து ரூ.294 ஆக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006 -ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வை அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:

* ஊரக தூய்மை காவலர்களின் மதிப்பூதியம் ரூ.5,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.

*100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 2ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். நமக்கு நாமே திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் கட்டப்படும். தமிழ்நாட்டில் 2,500 ஊராட்சிகளில் உள்ள பள்ளி சீரமைப்புகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவேற்றப்படும்.

* தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் 2 ஆண்டுகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2.16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 149 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்துள்ளன.

* கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரம் மேம்பட ரூ.1000 கோடியில் தனிநபர் சமுதாய சொத்துக்கள் உருவாக்கப்படும்.

*விளிம்புநிலை மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.1.500 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.

* ஊரக பகுதிகளில் பணிபுரியும் 66,130 தூய்மை காவலர்களின் மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

*முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் 2,043 புதிய சத்துணவு கூடங்கள் ரூ.154 கோடியில் கட்டப்படும்.

*10.50 லட்சம் மகளிர் குழுக்களுக்கு ரூ.134 கோடி மதிப்பில் முருங்கை க்ன்றுகள் வழங்கப்படும்

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Next Story