புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும்போது சுவர் இடிந்து விபத்து - உயிரிழப்பு 5 ஆக உயர்வு


புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும்போது சுவர் இடிந்து விபத்து - உயிரிழப்பு 5 ஆக உயர்வு
x

புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும்போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட வசந்தம் நகர் பகுதியில் வாய்க்கால் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக பழைய வாய்க்கால்களை பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் வசந்தம் நகர் பகுதியில் இன்று 16 தொழிலாளர்கள் வாய்க்கால் தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த 7 அடி உயர மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பாக்கியராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து புதுச்சேரி தீயணைப்புதுறை மற்றும் முதலியார்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் இடிபாடுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பாலமுருகன், ஆரோக்கியராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல் மற்றும் ராஜேஷ் கண்ணா ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story