கர்நாடக சட்டசபை தேர்தலில் மத்திய-மாநில அரசுகளின் சாதனைகளை முன்வைத்து மக்களை சந்திக்கிறோம்; மத்திய மந்திரி ஷோபா பேட்டி


கர்நாடக சட்டசபை தேர்தலில் மத்திய-மாநில அரசுகளின் சாதனைகளை முன்வைத்து மக்களை சந்திக்கிறோம்; மத்திய மந்திரி ஷோபா பேட்டி
x
தினத்தந்தி 11 April 2023 6:45 PM GMT (Updated: 11 April 2023 6:47 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தலில் மத்திய-மாநில அரசுகளின் சாதனைகளை முன்வைத்து மக்களை சந்திக்கிறோம் என்று மத்திய மந்திரி ஷோபா கூறியுள்ளார்.

பெங்களூரு:

மத்திய இணை மந்திரி ஷோபா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தூய்மை அடைய வேண்டும்

கர்நாடக சட்டசபை தேர்தலில் மத்திய-மாநில அரசுகளின் சாதனைகளை முன்வைத்து மக்களை சந்திக்கிறோம். இது எங்களின் வெற்றிக்கு உதவியாக இருக்கும். நாங்கள் நேர்மையான அரசியலை முன்னெடுக்கிறோம். எதிர்மறையான அரசியலை நடத்துகிறவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மகாத்மா காந்தி நாடு தூய்மை அடைய வேண்டும் என்று விரும்பினார்.

அவரது இந்த கனவை நனவாக்க பிரதமர் மோடி தூய்மை பாரதம் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். வட கர்நாடகத்தில் வீடுகளில் கழிவறை வசதி இருக்கவில்லை. திறந்தவெளி பகுதியையே அந்த மக்கள் கழிவறையாக பயன்படுத்தினர்.

சமையல் கியாஸ்

இன்று வீடுகளுக்கு தனி கழிவறை கட்டி கொடுத்துள்ளோம். இது எங்கள் அரசின் சாதனை ஆகும். முன்பு சமையல் கியாஸ் இணைப்பு பெறுவது கடினமான ஒன்றாக இருந்தது. பிரதமராக மோடி வந்த பிறகு 2 நாட்களில் சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் சமையல் கியாஸ் இணைப்பு வசதி உள்ளது. விதவை உதவித்தொகை, சந்தியா சுரக்ஷா திட்டம் என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளோம்.

காங்கிரசை போல் நாங்கள் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 கொடுப்பதாக அக்கட்சி கூறுகிறது. இந்த வாக்குறுதியை செயல்படுத்த சாத்தியமில்லை. காங்கிரஸ் கட்சி பிற மாநிலங்களில் இத்தகைய வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவற்றியதா?.

இவ்வாறு ஷோபா கூறினார்.


Next Story