அர்ஜுனா உள்பட 6 யானைகளுக்கு எடை அளவு கணக்கீடு


தினத்தந்தி 27 Sep 2023 6:45 PM GMT (Updated: 27 Sep 2023 6:47 PM GMT)

தசரா விழாவில் பங்கேற்கும் அர்ஜுனா உள்பட 6 யானைகளுக்கு எடை அளவு கணக்கீடப்பட்டது.

மைசூரு

மைசூரு தசரா விழா

மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் தசரா விழாவால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இந்த விழாவில் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி என்றழைக்கப்படும் யானைகள் ஊர்வலம் நடைபெறும். இதனை காண வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் குவிவார்கள்.

இந்தநிலையில் இந்த ஆண்டு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு தசரா விழாவில் 14 யானைகள் கலந்து கொள்கின்றன.

அரண்மனை வளாகம்

முதல் கட்டமாக அபிமன்யு, அர்ஜுனா, பீமா, கோபி, தனஞ்செயா, வரலட்சுமி, விஜயா, மகேந்திரா, கஞ்சன் ஆகிய 9 யானைகள் மைசூரு அரண்மனை வளாகத்திற்கு வந்தன.

அந்த யானைகளுக்கு எடை அளவு கணக்கீடு செய்யப்பட்டன. மேலும் தினமும் 9 யானைகள் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் 2-ம் கட்டமாக 5 யானைகள் நேற்றுமுன்தினம் அரண்மனை வளாகத்திற்கு வந்தன.

அந்த யானைகளுக்கு அரண்மனை மண்டலி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று 6 யானைகளுக்கு எடை அளவு கணக்கீடப்பட்டன. அதாவது முதல் கட்ட யானைகளில் வந்த அர்ஜுனா யானை ஆட்கொல்லி புலியை பிடிக்க சென்றது.

எடை அளவு

அதனால் அந்த யானைக்கு எடை அளவு கணக்கீடு செய்யவில்லை. இதனால் தற்போது 2-ம் கட்ட யானைகள் பிரசாந்தா, சுக்ரீவா, ரோகித், லட்சுமி, ஹிரன்யா, மற்றும் அர்ஜுனா ஆகிய யானைகளின் எடை அளவு விவரம்:-

1). அர்ஜுனா 5,680 கிலோ, 2).சுக்ரீவா 5035 கிலோ, 3).பிரசாந்தா 4,970 கிலோ, 4).ரோகித் 3,350 கிலோ, 5). ஹரன்யா 2915 கிலோ, 6).லட்சுமி 3235 கிலோவும் உள்ளன.

இந்த எடை அளவு வனத்துறை அதிகாரி சவுரப்குமார் தலைமையில் நடந்தது. நேற்று முதல் 14 யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மைசூரு டவுன் பகுதியில் லேசான மழை பெய்தது.

அப்போது யானைகள் மழையில் நனைந்தப்படி நடைபயிற்சி சென்றன. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.


Next Story