மேற்கு வங்காளம்: ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..! எல்லை பாதுகாப்பு படையினர் அதிரடி..!


மேற்கு வங்காளம்: ரூ.1 கோடி மதிப்புள்ள  தங்க கட்டிகள் பறிமுதல்..! எல்லை பாதுகாப்பு படையினர் அதிரடி..!
x

image courtesy; ANI

தினத்தந்தி 6 Aug 2023 11:25 AM GMT (Updated: 6 Aug 2023 11:56 AM GMT)

ரூ. 1 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி கொண்டு வந்தவரை கைது செய்து அவரிடமிருந்து 15 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வருவதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகம் படும்படியான வகையில் ஒருவர் வந்துள்ளார். அவரிடம் சோதனை மேற்கொண்டதில் மோட்டார் சைக்கிளின் அடியில் மறைத்து வைத்து தங்க கட்டிகள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் அவரிடம் இருந்து 15 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தங்க கட்டிகள் அனைத்தும் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்டவை.

அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பிரோஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்ருள் ஷேக் என்பது தெரிய வந்தது. மேலும் அதே கிராமத்தை சேர்ந்த பாபு ஷேக் என்பவர் தான் இந்த கடத்தல் தங்க கட்டிகளை ஜெய்ருள் ஷேக்கிடம் கொடுத்து எல்லை சோதனை சாவடியை தாண்டி சைதாபூர் சந்தையில் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு கொடுத்துள்ளார். இதற்கு அன்பளிப்பாக ரூ.30,000 கொடுத்துள்ளார். விசாரணை முடிவில் பணத்திற்கு ஆசைப்பட்டு செய்ததாக குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.1.10 கோடி ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளையும், கடத்தல்காரரையும் எல்லை பாதுகாப்பு படையினர் ஜாங்கிபூரில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பாபு ஷேக்கை தேடி வருகின்றனர்.


Next Story