வீராங்கனைகளுக்கு நீதி வழங்க முடியாத புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தேவை என்ன? கர்நாடக முதல்-மந்திரி கேள்வி


வீராங்கனைகளுக்கு நீதி வழங்க முடியாத புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தேவை என்ன? கர்நாடக முதல்-மந்திரி கேள்வி
x

போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு நீதி வழங்க முடியாதபோது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தேவை என்ன? என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூரு,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் விவகாரத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூறும்போது, புதிய நாடாளுமன்ற கட்டிடம் முன் வரும் 28-ந்தேதி அமைதியாக மகளிர் கூட்டம் ஒன்றை நடத்த மல்யுத்த வீராங்கனைகள் முடிவு செய்து உள்ளோம். இதில், அனைத்து முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பார்கள்.

எனினும், எங்களுக்கு ஆதரவு தரும் பெண்களால் முதன்மையாக இது நடத்தப்படும் என கூறினார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் முன் நடைபெற கூடிய மகா பஞ்சாயத்து கூட்டம் ஆனது, அமைதியான போராட்டத்தில் ஒன்றாக இருக்கும் என கூறினார்.

இவர்களது போராட்டத்திற்கு, சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம் உள்பட அரியானா, பஞ்சாப், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாய சங்க தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். போராட்டத்திற்கு அரியானா உள்துறை மற்றும் சுகாதார மந்திரியான அனில் விஜ் தனது ஆதரவை வெளிப்படுத்தினார். மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் கூறும்போது, பாரபட்சமின்றி டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.

இந்நிலையில், நார்கோ சோதனை, பாலிகிராப் சோதனை அல்லது உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார் என பிரிஜ் பூஷண் சமீபத்தில் கூறினார்.

இதன்பின்னர், பஜ்ரங் பூனியா செய்தியாளர்களிடம் கூறும்போது, நார்கோ சோதனைக்கு தயாராகவே இருக்கிறோம் என கூறினார். இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்ட பகுதியில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடம் நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இன்று புறப்பட்டு சென்றனர்.

எனினும், அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றி, அழைத்து சென்றனர். இதுபற்றி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு நீதி வழங்க முடியாதபோது, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தேவை என்ன?

நீதி கேட்டு போராடியதற்காக வீரர், வீராங்கனைகளில் சிலரை போலீசார் கைது செய்து உள்ளனர் என்பது துரதிர்ஷ்டவசம். நாம் மனிதர்களாக, இந்தியர்களாக அவர்களுடன் ஒன்றாக துணை நின்று, அவர்களது குறைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.

நமக்காக பதக்கங்களை வென்று, இந்தியர்களை அவர்கள் பெருமையடைய செய்து உள்ளனர். இந்தியர்களாக இருப்பதற்கு, அவர்களை நாம் பெருமையடைய செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார்.


Next Story