மின் கட்டணம் உயர்வுக்கு காரணம் என்ன?; மந்திரி சுனில்குமார் விளக்கம்


மின் கட்டணம் உயர்வுக்கு காரணம் என்ன?; மந்திரி சுனில்குமார் விளக்கம்
x
தினத்தந்தி 24 Sep 2022 6:45 PM GMT (Updated: 24 Sep 2022 6:46 PM GMT)

மின் கட்டணம் உயர்வுக்கு காரணம் என்ன? என்பதற்கு மந்திரி சுனில்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

உடுப்பி:

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் மின் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டது. அதாவது யூனிட்டுக்கு 43 காசு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளும், மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மின் கட்டணம் உயர்வு குறித்து உடுப்பியில் நேற்று மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது;-

கர்நாடகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2015-ம் ஆண்டு நிலக்கரியின் விலை உயர்வுக்கு ஏற்றார் போலும், நிலக்கரி விலையை ஒப்பிட்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது என்ற புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. அதாவது 3 மாதங்களுக்கு ஒருமுறை நிலக்கரி விலையை மதிப்பீடு செய்து, அதற்கு தகுந்தாற் போல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, தற்போது நிலக்கரி விலை உயர்வு காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய விதிமுறைகள் கடந்த 2015-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அமலுக்கு வந்திருந்தது. மாநிலத்தில் மின் கட்டணம் உயர்வதற்கு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறையே காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story