எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மழைக்கால கூட்டத்தொடர்; ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் ரத்தாகுமா?


எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மழைக்கால கூட்டத்தொடர்; ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் ரத்தாகுமா?
x
தினத்தந்தி 7 Aug 2023 2:22 AM GMT (Updated: 7 Aug 2023 4:43 AM GMT)

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம், டெல்லி நிர்வாக மசோதாக்களால் மழைக்கால கூட்டத்தொடரின் இந்த கடைசி வாரத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. ஆனால் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் பதிலை கோரியும், விரிவான விவாதம் நடத்தக்கேட்டும் எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் பூண்டன. இதனால் இரு அவைகளும் கணிசமாக முடங்கின. இதற்கிடையே மணிப்பூர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தன. அதை சபாநாயகரும் ஏற்று இருந்தார்.

எதிர்க்கட்சிகளின் அவை முடக்கத்துக்கு மத்தியிலும் சுமார் 20 மசோதாக்கள் இதுவரை நிறைவேற்றப்பட்டு உள்ளன. குறிப்பாக மக்களவையில் 15 மசோதாக்களும், மாநிலங்களவையில் 12 மசோதாக்களும் நிறைவேறியுள்ளன. இதில் 9 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதில் வனப்பாதுகாப்பு திருத்த மசோதா, உயிரியியல் பன்முகத்தன்மை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் சிறிய அளவிலான விவாதங்களுடன் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களில் பெரும்பாலானவை, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்பட்டதற்கு பிறகு நிறைவேற்றப்பட்டவை ஆகும். அதேநேரம் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சிகள் கடந்த வாரம் தங்கள் போராட்டத்தை சற்றே தணித்திருந்தன. குறிப்பாக, மக்களவையில் நடந்த டெல்லி நிர்வாக மசோதா விவாதத்திலும் பங்கேற்றன.

இந்த நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 11-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்த கடைசி வாரத்தில் மேலும் சில மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மேலும், மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானமும் மக்களவையில் நாளை (செவ்வாய்க்கிழமை) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மக்களவை அலுவல் ஆய்வுக்குழுவானது, இந்த தீர்மானம் மீதான விவாதத்துக்கு 12 மணி நேரம் ஒதுக்கி உள்ளது. விவாதத்துக்குப்பின் பிரதமர் மோடி 10-ந்தேதி பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தவிர டெல்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையில் இன்று (திங்கட்கிழமை) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. முக்கியமான அலுவல்களால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இந்த இறுதி வாரம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதம் இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு இருந்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளதால், அவரது எம்.பி. பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மக்களவை செயலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த மனுவை மக்களவை செயலகம் இன்று பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பரிசீலித்தால் அவரது பதவி திரும்ப வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எதிர்க்கட்சியினரிடையே நிலவி வருகிறது. ராகுல் காந்தியின் எம்.பி. பதவி மீண்டும் வழங்கப்பட்டால், அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசுவதற்கு அவரை முக்கியமாக பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story