தாஜ்மகாலை கட்டியது யார்..? ஆய்வு செய்ய தொல்லியல்துறைக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு...!


தாஜ்மகாலை கட்டியது யார்..? ஆய்வு செய்ய தொல்லியல்துறைக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு...!
x
தினத்தந்தி 3 Nov 2023 3:19 PM GMT (Updated: 3 Nov 2023 3:25 PM GMT)

தாஜ்மகாலை கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்ய பரிசீலனை செய்துள்ளதாக டெல்லி ஐகோர்ட்டில் தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

உலகப்புகழ் பெற்ற தாஜ்மகாலை காட்டியது யார் என்றும், உண்மையான வரலாற்றை கண்டறிய வேண்டும் எனவும் இந்து சேனா அமைப்பு டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தது.

இந்து சேனா அமைப்பின் தலைவர் சுர்ஜித் சிங் யாதவ் தாக்கல் செய்த மனுவில், 'ராஜாமான்சிங் அரண்மனையாக இருந்த தாஜ்மகால் ஷாஜஹானால் புதுப்பிக்கப்பட்டது. அதன்பிறகு அது அவரின் மனைவியின் கல்லறையாக மாற்றப்பட்டது. எனவே, தாஜ்மகால் தொடர்பான தவறான வரலாற்றை புத்தகங்களில் இருந்து அகற்ற தொல்லியல்துறை மற்றும் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மேலும் தாஜ்மகாலின் வயது, ராஜாமான்சிங் அரண்மனை கட்டப்பட்ட ஆண்டு குறித்து ஆய்வு நடத்த தொல்லியல்துறைக்கு உத்தரவிடவேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு டெல்லி ஐகோர்ட் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி துசார் ரான் கெடலோ ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது தாஜ்மகாலை கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்ய பரிசீலனை செய்துள்ளதாக டெல்லி ஐகோர்ட்டில் தொல்லியல்துறை தெரிவித்தது.

தொடர்ந்து நீதிபதிகள் தாஜ்மகாலின் உண்மையான வரலாறு குறித்து ஆய்வு நடந்தும்படி மத்திய தொல்லியல்துறைக்கு உத்தரவிட்டனர். மேலும் ராஜாமான்சிங் அரண்மனையை சீரமைத்து ஷாஜஹான் பயன்படுத்தினாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர்.


Next Story