'அக்னிபத்' திட்டத்தில் பா.ஜனதாவினர் தங்களது பிள்ளைகளை சேர்ப்பார்களா?; டி.கே.சிவக்குமார் கேள்வி


அக்னிபத் திட்டத்தில் பா.ஜனதாவினர் தங்களது பிள்ளைகளை சேர்ப்பார்களா?; டி.கே.சிவக்குமார் கேள்வி
x

‘அக்னிபத்’ திட்டத்தில் பா.ஜனதாவினர் தங்களது பிள்ளைகளை சேர்ப்பாா்களா? என்று டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நாளை காங்கிரஸ் போராட்டம்

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இது இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். இதன் காரணமாக தான் அக்னிபத் திட்டத்திற்கு எதிராகவும், இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் வருகிற 27-ந் தேதி (அதாவது நாளை) காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. அக்னிபத் திட்டத்திற்கு எந்த எதிர்ப்பு வந்தாலும், அது செயல்படுத்தப்படும், திரும்ப பெறப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இளைஞர்களுக்கு எதிரான திட்டம் என்பதால், இதனை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். போராட்டம் நடத்துவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது.

பா.ஜனதாவினர் தங்களது பிள்ளைகளை...

4 ஆண்டுகள் ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்துவிட்டு, நமது நாட்டின் இளைஞர்களை காவலாளியாக வேலை செய்ய விடமாட்டோம். அக்னிபத் திட்டத்தில் பா.ஜனதாவினர் தங்களது பிள்ளைகளை சேர்த்து விடுவார்களா?. அவர்களது பிள்ளைகள் மட்டும் என்ஜினீயர், டாக்டர் உள்ளிட்ட உயர் படிப்புகளை படிக்க வேண்டும். சாதாரண ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகள் ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவிட்டு, ஏதோ ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்ய வேண்டுமா?.

இந்த திட்டம் சரியானது இல்லை. எனவே எப்போதும் போல ராணுவத்திற்கு நிரந்தரமாக இளைஞர்களை சேர்க்க வேண்டும். ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றால், அதற்காக வேறு திட்டத்தை செயல்படுத்தலாம். அக்னிபத் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story