துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி பெண் கொலை; காதலன் கைது


துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி பெண் கொலை; காதலன் கைது
x

வேறொருவருடன் பழகியதால் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி பெண்ணை கொன்ற அவரது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

உப்பள்ளி;

காதல்

தார்வார்(மாவட்டம்) டவுனில் பர்சீ குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முனீர் மகாந்தேஷ் (வயது 28). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவருடன் மரியவாடா கிராமத்தை சோ்ந்தவர் ஷோபா மாதர் (24) என்பவரும் பணியாற்றி வந்தார்.

அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், ஷோபாவுக்கு மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

அவருடன் ஷோபா பழகி வந்துள்ளார். மேலும் முனீருடன் பேசுவதை குறைத்து கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி முனீருக்கு தெரியவந்துள்ளது.

கொலை

இதனால் ஆத்திரமடைந்த முனீர், ஷோபாவை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 3-ந்தேதி ஷோபாவை முனீர் சவதத்தி ரோட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு வைத்து 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். வேறொரு நபருடன் பழகுவது குறித்து முனீர், ஷோபாவை கண்டித்துள்ளார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முனீர், ஷோபாவை தாக்கியதுடன் அவரிடம் இருந்து துப்பட்டாவை பிடுங்கி கழுத்தை நெரித்தார். இதில் மூச்சுத்திணறி ஷோபா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து அவரது உடலை அங்குள்ள புதரில் மறைத்து வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

காதலன் கைது

இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி உடல் அழுகிய நிலையில் ஷோபாவின் உடலை தார்வார் புறநகர் போலீசார் மீட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வேறொருடன் பழகியதால் ஷோபாவை முனீர் துப்பட்டாவாால் கழுத்தை இறுக்கி கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனீரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த முனீரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story