ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி பெண்ணுக்கு மிரட்டல்; கணவர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு


ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி பெண்ணுக்கு மிரட்டல்; கணவர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
x

ஜீவனாம்ச வழக்கை வாபஸ் பெறுமாறும் இல்லையென்றால் ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறியும், பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த கணவர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சிவமொக்கா;

நடத்தையில் சந்தேகம்

சிவமொக்கா (மாவட்டம்) டவுன் ஆர்.எம்.எல். நகரில் 42 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அஜ்கர் என்பவருக்கும் கடந்த 1993-ம் ஆண்டு திருமணம் ஆனது. தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், விவாகரத்து கேட்டு பெண் விண்ணப்பித்து இருந்தார். இந்த வழக்கில் இருவரும் ஒருமனதாக விவாகரத்து பெற்றனர். பின்னர், அந்த பெண் மஞ்சுநாதா காலனியில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் அந்த பெண் ஜீவனாம்சம் கேட்டு கணவர் மீது வழக்கு தொடர்ந்தார். அதுதொடர்பான வழக்கு சிவமொக்கா கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சிவமொக்கா மஞ்சுநாதா காலனி பகுதியில் அந்த பெண் நடந்து சென்றார். அப்போது அந்த பெண்ணை அவரது கணவர் உள்பட 4 பேர் வழிமறித்தனர்.

வழக்கு வாபஸ்

அப்போது அவர்கள் ஜீவனாம்சம் கோரி தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கூறினர். இல்லையென்றால் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக அஜ்கர் மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வருவதற்குள் 4 பேரும் தப்பி சென்றனர்.

இதையடுத்து அந்த பெண் சம்பவம் குறித்து சிவமொக்கா மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பெண்ணின் கணவர் உள்பட 4 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story