உலக கோப்பை கிரிக்கெட்; பட்டாசு வெடித்த அதிர்ச்சியில் உயிரிழந்த போலீஸ் குதிரை


உலக கோப்பை கிரிக்கெட்; பட்டாசு வெடித்த அதிர்ச்சியில் உயிரிழந்த போலீஸ் குதிரை
x

பட்டாசுகளை வெடிக்க முன்அனுமதி பெற்று விட்டோம் என வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பின் செயலாளர் நரேஷ் ஓஜா கூறினார்.

கொல்கத்தா,

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்தது.

அப்போது, விராட் கோலியின் 35-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. திடீரென பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதும், கொல்கத்தா காவல் துறையை சேர்ந்த குதிரை ஒன்று மிரண்டு போனது. அது பந்தய குதிரை வகையை சேர்ந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொல்கத்தா காவல் துறையில் சேர்க்கப்பட்டது.

5 வயது கொண்ட அந்த குதிரை, அதிர்ச்சியில் முழு வேகத்தில் பிளாசி சாலையில் ஓடியுள்ளது. வழியில் 2 அல்லது 3 வாகனங்கள் மீது மோதியுள்ளது என கூறப்படுகிறது. இதன்பின் சாலையில் சரிந்து விழுந்தது. எனினும், மாரடைப்பு ஏற்பட்டு அது உயிரிழந்து உள்ளது என பின்னர் தெரிய வந்தது.

இதுபற்றி வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பின் செயலாளர் நரேஷ் ஓஜா கூறும்போது, பட்டாசுகளை வெடிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கொல்கத்தா காவல் துறையிடம் முன்அனுமதி பெற்று விட்டோம் என கூறியுள்ளார்.


Next Story