'மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகள் தீவிரமானது' டெல்லி போலீசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்


மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகள் தீவிரமானது டெல்லி போலீசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
x

மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் தீவிரமானது என தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் புகார் எழுந்தது.

இதையடுத்து இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர், பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விளையாட்டு துறை அமைச்சகம் குறுக்கிட்டு விசாரணை ஆணையம் அமைத்தது.

மேரி கோம் தலைமையிலான ஆணையம் விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்து விட்டது. எனினும், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் டெல்லியில் போராட்டத்தில் குதித்தனர். பாலியல் தொல்லை குறித்த தங்களின் புதிய புகார் மீது முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யாததை கண்டித்தும், ஏற்கனவே நடந்த விசாரணை குழுவின் அறிக்கை விவரத்தை கோரியும் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட வேண்டும் என்று கோரி 7 மல்யுத்த வீராங்கனைகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. அந்த மனு மீது டெல்லி போலீஸ் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு பட்டியலிடும்படியும் உத்தரவிட்டனர்.

மேலும், மனுதாக்கல் செய்த வீராங்கனைகளின் அடையாளம் தெரியாதவகையில், நீதித்துறை ஆவணங்களில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் உத்தரவிட்டனர்.


Next Story